Monday, 14 March 2016

மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி இருவர் சாவு

திருவொற்றியூர், பிப்.29:திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் சதீஷ் ஆறுமுகம் (24), சந்திரலேகா (22) ஆகியோர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர்.
   பொன்னேரிச் சேர்ந்தவர் சதீஷ் ஆறுமுகம். இவருடன் பணியாற்றுபவர் சந்திரலேகா. மீஞ்சூரைச் சேர்ந்தவர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். திங்கள்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் எண்ணூர் விரைவு சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் அருகே வந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஷ் ஆறுமுகம், சந்திரலேகா ஆகிய இருவரும் லாரியின் அடியில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக கண்டெய்னர் லாரியின் டிரைவர் 
லாரியிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் அருகில் வசிப்போர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு 
அனுப்பி வைத்தனர். 
      இது குறி்த்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் 
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். 

பெட்டிச் செய்தி......
நிறைவடையாத சாலைப் பணியால் அடிக்கடி விபத்து: பொதுமக்கள் புகார்.
விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியது,
    துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் எண்ணூர் விரைவு சாலையில் 
பல ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பெரும்பாலான இடங்களில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனையடுத்து வேகமாக வரும் வாகனங்கள் திடீரென குறுக்கிடும் குறுகலான சாலைகளால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் இதுவரை விளக்குகள் அமைக்கப்படவும் இல்லை. மேலும் ஆபத்து நிறைந்த இப்பகுதியில் இருட்டில் ஒளிரும் எச்சரிக்கைப் பலகைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வைக்கப்படவில்லை. இருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடம் இந்தவகையில்தான் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து இடங்களிலும் ஆறு வழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டு, விளக்குகள் அமைக்கப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் விபத்தினைத் தவிர்க்க இயலும் எனத் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment