Monday, 14 March 2016


சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

திருவொற்றியூர்,மார்ச்.1:சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரிகள் திங்கள்கிழமை இரவு முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னைத் துறைமுக நிர்வாகம் லாரி உரிமையாளர் சங்கங்கள், முனைய நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து 
இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. 
வேலை நிறுத்தம் குறித்து கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியது,
     சென்னைத் துறைமுகத்தை நம்பி சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் உள்ளன. இந்நிலையில் துறைமுகத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்யப்படவில்லை. இங்குள்ள இரண்டு தனியார் சரக்குப் பெட்டகமுனையங்களிலும் போதுமான கிரேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே கண்டெய்னர்களைக் கையாள்வதில் தேவையற்ற கால தாமதம் நிலவுகிறது. மேலும் இந்நிறுவனங்கள் கப்பல்களைக் கையாள்வதில் காட்டும் முன்னுரிமை கண்டெய்னர்களை லாரிகளிலிருந்து இறக்கும் பணியில் காட்டுவதில்லை. மேலும் துறைமுகத்திற்கு வெளியே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் சரக்குப் பெட்டக நிலையங்கள் 
உள்ளன. இவை அனைத்தும் தங்களுக்கென 20 கண்டெய்னர் லாரிகளை வைத்துக் கொள்வது என எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகளைச் சொந்தமாக இயக்கி வருகின்றன.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
வாழ்வாதாரம் பாதிப்பு:
    மேலும் கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளையடுத்து கண்டெய்னர் லாரிகள் வரிசையாகச் சென்று வந்தன. எனவே இந்த காலகட்டத்தில் 
எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக இதனைச் சீர்குழைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து நெரிசல் குறித்து 15 நாள்களுக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என துறைமுக நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் 45 நாள்கள் ஆகியும் இதுவரை ஒரு கூட்டம் கூட கூட்டப்படவில்லை. இதனால் ஆரம்பத்தில் கட்டுக்கோப்பாக இருந்த கண்டெய்னர் லாரிகள் வரிசை படிப்படியாக தளர்ந்துவிட்டது. 
இதனையடுத்து ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டு துறைமுகத்திற்கு வெளியே சுமார் 30 கி.மீ தூரத்திற்கு லாரிகள் இரண்டு மூன்று வரிசைகளாக நிற்கின்றன. இதனால் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். 
   துறைமுகத்தின் உள்ளே ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. ஆனால் இவற்றை லாரிகள் நிறுத்துமிடங்களாக மாற்றி தருவதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் எழுந்துள்ள பிரச்னைகளால் ஒட்டு மொத்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் இப்பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

பெட்டி்ச செய்தி...
அழுகும் வெங்காயம்: ஏற்றுமதியாளர்கள் கண்ணீர்

போராட்டம் குறித்து வெங்காயம் ஏற்றுமதி நிறுவன மேலாளர் சந்திரபோஸ் கூறியது, 
கண்டெய்னர் வேலை நிறுத்தம் திடீரென அறிவிக்கப்பட்டதால் ஏற்றுமதிக்காக கண்டெய்னர்களை ஏற்றி வந்த லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 
தற்போது வெங்காயம் ஏற்றுமதி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர்களில் ஏற்றப்படும் வெங்காயம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தபிறகு குளிரூட்டப்படும். இவை வழியிலேயே நிற்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில்  நட்டம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இது போல் அடிக்கடி நடைபெறும் வேலை நிறுத்தங்களால்தான்  இரால் உள்ளிட்ட கடலுணவு ஏற்றுமதியாளர்கள் கிருஷ்ணபட்டனம் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு இடமாறிவிட்டனர். ஏற்றுமதியாளர்களிடையே சென்னைத் துறைமுகம் தொடர்ந்து நம்பகத் தன்மையை இழந்து வருகிறது. ஆனால் இது குறித்து துறைமுக நிர்வாக உயர் அதிகாரிகள் எவ்விதத்திலும் கவலையின்றி நடந்து கொள்வது  வருத்தம் அளிக்கிறது

No comments:

Post a Comment