Monday, 14 March 2016

விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விராட்டுக்கு சென்னையில் பிரியா விடை 

திருவொற்றியூர், பிப்.15: விரைவில் பணியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விராட் (INS VIRAAT)-க்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 
    இந்திய கடற்படையின் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விராட். இக்கப்பல் 1957-ம் ஆண்டு கட்டப்பட்டு பிரிட்டனின் ராயல் நேவியில் இணைக்கப்பட்டது. இக்கப்பலை 1987-ல் இந்தியா வாங்கி இந்திய கடற்படையில் இணைத்தது. அதிகபட்சம் 60 ஆண்டுகள்வரை மட்டுமே போர்க்கப்பல்கள் பணியில் வைத்திருக்க முடியும் என்பதால் ஒட்டுமொத்தமாக சுமார் 59 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் ஐ.என்.எஸ்.விராட்டுக்கு  கடற்படையிலிருந்து ஓய்வளிப்பது என பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
     இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்வதேச கடற்படைக் கப்பல்கள் மதிப்பாய்வு-2016 என்ற நிகழ்ச்சி விசாகபட்டனத்தில் நடைபெற்றது. இதில் ஐ.என்.எஸ். விராட் கலந்து கொண்டது. இதுவே இக்கப்பலின் வழக்கமான இறுதிப் பணியாக இருந்தது. விரைவில் ஓய்வு அளிக்கப்பட்ட பிறகு ஆந்திர மாநிலத்திடம் ஒப்படைக்க 
பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இக்கப்பல் தனது பிரியாவிடை பயணத்தை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை சென்னை வந்த இக்கப்பலை ஏராளமானோர் கூடி நின்று வரவேற்றனர்.
நட்சத்திர விடுதியாக மாற்றத் திட்டம்:
   சுமார் 1,500 அறைகள் உள்ள இக்கப்பலை அருங்காட்சியகத்துடன் கூடிய ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென கப்பலை கரைக்குக் கொண்டு வந்து நிலைநிறுத்திட ரூ.400 கோடியும், ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையாக மாற்றியமைக்க ரூ.300 கோடியும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் சென்னத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட விராட் பயணத்தை மும்பைத் துறைமுகத்தில் நிறைவு செய்ய உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment