Monday, 14 March 2016

அய்யா வைகுண்டர் 184-வது அவதாரத் திருநாள் ஊர்வலம் 

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவொற்றியூர், மார்ச் 4:அய்யா வைகுண்டர் 184-வது அவதாரத் திருநாளையொட்டி அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. 
    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர். இங்கு இவரது பெயரால் வைகுண்டர் தலைமைத் தர்மபதி இயங்கி வருகிறது. அய்யா வைகுண்டரின் போதனைகளைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர்  
வடசென்னை பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அய்யா வைகுண்டருக்கு மணலி புது நகரில் ராஜகோபுரத்துடன் கூடிய வைகுண்ட தர்மபதி அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அய்யா வைகுண்டரின் 184-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. பழைய வண்ணாரப்பேட்டையில் காலை 5.30 மணிக்குத் தொடங்கிய இவ்வூர்வலம் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் வழியாக மணலி புதுநகரில் அமைந்துள்ள வைகுண்ட தர்மபதியை காலை 9 மணிக்கு சென்றடைந்தது.  
     இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் வைகுண்ட தர்மபதியில் உச்சி படிப்பு, அன்னதானம், தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நாங்குனேரி எம்.எல்.ஏ நாராயணன்,  தர்மபதி நிர்வாகி தங்கப் பெருமாள், வேலுச்சாமி, ஜெயக்கொடி, தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment