Monday, 14 March 2016


அடுத்த தலைமுறைக்கான உலக இளம் தலைவர்கள்: 240 பன்னாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி

ஜப்பானியக் கப்பல் சென்னை வந்தது

திருவொற்றியூர், பிப்.10:அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் எம்.வி.நிப்பான் மேரு என்ற கப்பலில் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனர். 
   கப்பலில் வந்த இளைஞர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கப்பலிலிருந்து கீழே வந்த இளைஞர்களை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் இந்தியப் பாரம்பரிய முறைப்படி சந்தனம், மலர் மாலை, பூக்கள், இனிப்பு வகைகள் அளித்து வரவேற்றனர்.
  இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் பிரதிப் சோமசுந்தரம் கூறியது,
   தற்போது ஒவ்வொரு நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகமயமாக்கள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கேற்ற வகையில் அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தேர்வு செய்து பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் அழைத்துச் சென்று அந்நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், வல்லமை, பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஜப்பான் அரசு அறிவித்து முழுமையான நிதி உதவியும் அளிக்கிறது. இதற்கென தேர்வுக் குழு அமைக்கப்பட்டு 120 ஜப்பான் நாட்டு இளைஞர்கள் மற்றும் இந்தியா, சோவியத் யூனியன், பஹ்ரைன், மெக்சிகோ, எமிரேட், உக்ரைன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, சிலி, தான்சானியா உள்ளிட்ட சேர்ந்தவர்கள் தலா 120 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
    இவர்கள் அனைவரும் ஜப்பான் நாட்டின் யோகொகோமா என்ற துறைமுகத்திலிருந்து எம்.வி.நிப்பான் மேரு என்ற கப்பலில் ஜன.26-ம் தேதி புறப்பட்டனர். செவ்வாய்க்கிழமை சென்னைத்துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள இவர்கள் புதன்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாச்சேத்ரா செல்கின்றனர். பின்னர் நான்கைந்து குழுக்களாகப் பிரிந்து பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சென்று இங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். பின்னர் இலங்கை சென்றுவிட்டு 34 நாள்கள் பயணத்திற்குப் பிறகு பிப்.29-ம் தேதி மீண்டும் ஜப்பான் சென்றடைகின்றனர் என்றார் பிரதிப் சோமசுந்தரம். 

No comments:

Post a Comment