Monday, 14 March 2016

சென்னை வந்த பாய்மரக் கப்பல்: கடற்படை வீராங்கணைகள் சாகச பயணம் 

திருவொற்றியூர், பிப்.12: ஐ.என்.எஸ்.வி. மாதேய்(Mhadei) என்ற பாய்மரக் கப்பல்  கடற்படையைச் சேர்ந்த வீராங்கணைகள் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இப்படகு சனிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.
   சில தினங்களுக்கு முன்பு விசாகபட்டனத்தில் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு -16 (International Fleet Review - 2016) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்கள் பங்கேற்றன. இந்திய கடற்படையின் சார்பில் சிறப்பம்சங்கள் கொண்ட ஐ.என்.எஸ்.வி. மாதேய் (Mhadei) என்ற பாய்மரக் கப்பல் பங்கேற்றது. இக்கப்பலில் முதல்முறையாக கேப்டன் முதல் ஊழியர்கள்வரை அனைவரும் கடற்படையைச் சேர்ந்த பெண் வீராங்கணைகளே பங்கேற்றனர். லெப்டினன்ட் கமாண்டார் வார்டிகா ஜோஷி தலைமையில் 6 வீராங்கணைகள் மாதேய் பாய்மரப்படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு கோவா திரும்பும் வழியில் இப்படகு சென்னைத் துறைமுகத்திற்கு சனிக்கிழமை வந்தடைந்தது. 
அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் கப்பலில் வந்த வீராங்கணைகளை வரவேற்றார். இக்கப்பலம் வரும் பிப்.16, புதன்கிழமை வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் பயணத்தைத் தொடங்கும் இக்கப்பல் பிப்.2 அன்று கொச்சி துறைமுகம் சென்றடைகிறது. மார்ச் 2 அன்று இக்கப்பலின் இருப்பிடம் அமைந்துள்ள கோவா சென்றடையும். 
     பாய்மரக் கப்பலில் படகினை இயக்கிட எவ்வித மின் மோட்டார்களும் இணைக்கப்பட்டிருக்காது. காற்று வீசு திசைக்கேற்றவாறி கப்பலை இயக்க முடியும்.  எனவே இதில் நடுக்கடலில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் சவாலானது. இதே மாதேய் பாய்மரக்கப்பலிதான் அபிலாஷ் டோமி என்ற கடற்படை வீரர் தனி ஒருவராக 151 நாள்கள் பயணம் செய்து உலகத்தைச் சுற்றி கடந்த மார்ச் 31,2013-ம் ஆண்டு மும்பையில் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
   இந்நிலையி்ல் அடுத்த ஆண்டு மாதேய் மூலம் பெண் வீராங்கணைகள் மட்டும் உலகத்தை சுற்றிவர இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இதற்கு இப்பயணம் உறுதுணையாக இருக்கும் என இக்கப்பலில் பயணிக்கும் வீராங்கணைகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment