Monday, 14 March 2016

மாசி பிரமோற்சவத் திருவிழா 

திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 

75 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்டம்

திருவொற்றியூர்,பிப்.19:மாசி பிரமோற்சவத் திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
     திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் 1941-ஆம் ஆண்டு கடைசியாகத் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய தேர் அமைக்க கடந்த 2013 ஆண்டு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் இதற்கென ரூ.46 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தேர் அமைக்கும் பணி முழுமையடைந்ததையடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 
     இந்நிலையில் மாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த பிப்.13 அன்று கொடியேற்றதுடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவினையொட்டி 
தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய தேரோட்டம் தேரடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு,மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் பிற்பகல் சுமார் 1 மணியளவில் நிலையினை அடைந்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இத்தேரோட்டத்தை திருவொற்றியூர் பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.  நூற்றுக்கணக்கான போலீஸார் ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
     இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாராயணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரிஅனந்தன், மண்டலக் குழு தலைவர் தனரமேஷ், கோயில் செயல் அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   விழாவின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேசுவரர்-சங்கிலிநாச்சியார் திருக்கல்யாண உற்சவம், மகிழடி சேவை, அறுபத்து மூவர் உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 
வரும் பிப்.21, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 


 
பெட்டிச் செய்தி:

இளைய தலைமுறையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் தேரோட்டம்

தேரோட்டம் குறித்து பாரதி பாசறை செயலாளர் முனைவர் மா.கி.ரமணன் கூறியது, 
    1941-ம் ஆண்டுவரை தேரோட்டம் முறையாக நடைபெற்றுள்ளது. பின்னர் அப்போதிருந்த தேர் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டதாகவும்,  இதனையடுத்து சுதந்திரப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதால் புதிய தேர் அமைப்பதில் யாரும் கவனம் செலுத்தவில்லை. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சேதமான தேர் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய தேரின் பாகங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 
அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தேரை அமைக்க தமிழக அரசு அமைத்துத் தந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்ட நிலையில் தற்போது முழுமையான தேரோட்டம் நடைபெற்றுள்ளது.  பழங்காலம் முதலே ஆன்மீக நகரங்களில் ஒன்றாக திருவொற்றியூர் இருந்து வந்துள்ளது. ஏங்கு ஏராளமான கோயில்களும், மடங்களும் இருக்கின்றன. தேரடி இருந்தும் தேர் இல்லாத குறை இளைய தலைமுறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்றார் ரமணன் 

No comments:

Post a Comment