Thursday, 19 May 2016

தேர்தல் களம்: தொகுதி நிலவரம்

ஒற்றியூரில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் இருந்த திருவொற்றியூர் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் மாதவரம் தொகுதி தனியே பிரிந்து சென்றது.  தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர், மணலி மண்டலங்கள் மட்டுமே இத்தொகுதியில் அடங்கியுள்ளது. இத்தொகுதியில் ஏராளமான  கனரகத் தொழிற்சாலைகளும், தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடைம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மீகத் தளங்களும் ஏராளமாக அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது இத்தொகுதியின் சிறப்பு .
தேர்தல் வரலாறு:
   1697-ல் உருவான இத்தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்கள் 1967,1971, 1989, 1996, 2006 ல் தி.மு.க.வும், 1977, 1991, 2001, 2011-ல் அதிமுகவும், 1980 அதிமுக கூட்டணியில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸும், 1984-ல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தற்போதைய எம்.எல்.ஏ கே.குப்பனை தவிர யாரும் இரண்டாவது முறையாக பேரவை உறுப்பினராக வெற்றிபெறவில்லை.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் கூட்டணிதான் தமிழகத்தில் எப்போதும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்ற வரலாறும் இத்தொகுதிக்கு உண்டு.  
வாக்காளர்கள் விபரம்:   
    இத்தொகுதியில் 2.86 லட்சம் மொத்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இத்தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர், மீனவர்கள் பெருவாரியாகவும், அதற்கடுத்த நிலையில் முதலியார், கிராமணி, நாடார், தேவர், யாதவர் உள்ளிட்டோர்  கணிசமான அளவிலும் உள்ளனர். இங்கு மொத்தம் 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அதில் இருவர் பெண்கள். மொத்தம் 292 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 
மும்முனை போட்டியா?
   தி.மு.க.வேட்பாளர் கே.பி.பி.சாமி, அ.தி.மு.க.சார்பில் பி.பால்ராஜ், தே.மு.தி.க. சார்பில் ஏ.வி. ஆறுமுகம், பா.ம.க.சார்பில் வழக்குரைஞர் ஆர்.வசந்தகுமாரி, பா.ஜ.க.சார்பில் சிவக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் இரா.கோகுல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் திமுக, அதிமுக இடையே இருமுனைப் போட்டி நிலவினாலும் இதனை முறியடிக்க தே.மு.தி.க முயற்சிக்கிறது. இதனால் மும்முனைப் போட்டியே ஏற்படலாம். 
சாதகமும் பாதகமும்:
கே.பி.பி.சாமி (திமுக):
    2006-ல் முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சாமி. மேலும் மீன்வளத்துறை அமைச்சராகவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். திமுக சார்பில் சாமியின் தந்தை பரசுராமன், மனைவி உமா, தம்பி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் நகராட்சி கவுன்சிலர்களாக பதவி வகித்துள்ளனர்.  இன்னொரு தம்பி கே.பி.சங்கர் தற்போது மாமன்ற உறுப்பினராக உள்ளார். தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் நன்கு அறிமுகம் ஆனவர். அமைச்சராக இருந்தபோது இப்பகுதியில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள்.  மீனவர் சமுதாய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் கணிசமான ஆதரவு இவரது பலம்.
     இவர் மீதும் தம்பிகள் மீதும் நிலுவையில் உள்ள கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு வழக்குகள். திமுக எதிர் கோஷ்டியினரின் முழுமையான ஆதரவின்மை உள்ளிட்டவை இவரது பலவீனம்.
பி.பால்ராஜ் (அ.தி.மு.க):
   எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் உள்ளவர் பால்ராஜ். அதிமுக பிளவு பட்டிருந்தபோது ஜெயலலிதா தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த பால்ராஜ் மிக எளிமையானவர். ஏற்கனவே ஒரு முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளதன் மூலம் ஏற்படும் அனுதாபம், எந்தப் பெரிய பதவி இல்லாத நிலையிலும் ஜெயலலிதா வழங்கியுள்ள விசுவாச வாய்ப்பு,  கட்சியின் சின்னம் இரட்டை இலை என்பவை இவரது பலம் ஆகும்.
    ஆனால் பலத்தைவிட பலவீனம் அதிகம் காணப்படுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்வரை வேட்பாளர் மாற்றம் இருக்கக் கூடும் என்ற வதந்தியால் 
பிரச்சாரத்தில் தொய்வு, தற்போதைய எம்.எல்.ஏ.வான கே.குப்பன் ஆதரவின்மை,
ஒருங்கிணைக்கப்படாத வாக்குச் சேகரிப்பு உத்திகள், செலவு செய்வதில் மிகுந்த சிக்கனம், கட்சியின் முக்கிய பிரமுகர்களைக்கூட அரவணைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு, தனக்கென ஆதரவாளர்கள் இல்லாதது உள்ளிட்டவை பலவீனமாகக் கூறப்படுகிறது. 
ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.):
    கடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே மாமன்ற உறுப்பினர் இத்தொகுதியில் மணலியைச் சேர்ந்த ஒருவருக்கு முக்கிய கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பதால் மணலி, சின்னச் சேக்காடு பகுதியில் கூடுதல் வாக்குகள் விழலாம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தொடரும் நிலையில் மீனவர் அல்லாத ஒருவருக்கு இந்தமுறை வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை, செலவில் தாராளம், கூட்டணி கட்சிகளில் கணிசமான வாக்கு வங்கி, முழுமையான ஒத்துழைப்பு உள்ளிட்டவை இவரது பலம்.
    பழைய தே.மு.தி.கவினரின் ஆதரவைப் பெறாதது, மணலியைச் சேர்ந்தவர் என 
நினைக்கும் திருவொற்றியூர் பகுதி வாக்காளர்கள், கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் உள்ளிட்டவை இவரது பலவீனமாக உள்ளன.
ஒற்றியூரில் வெற்றி யாருக்கு?
     இத்தொகுதியில் மாநிலம் தழுவிய சூழ்நிலைக்கு ஏற்ப திமுகவும், அதிமுகவும் மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தற்போது பெரிய அளவில் எவ்வித தாக்கமும் மாநில அளவில் ஏற்படாத நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குதான் திருவொற்றியூரில் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் நிலைதான் மேலோங்கியுள்ளது. அந்த வகையில்தான் மக்களிடம் நன்கு அறிமுகம் பெற்றுள்ள திமுக வேட்பாளர் கே.பி.பி.சாமி முன்னிலை வகிக்கிறார் என்பதை தற்போதைய நிலை. ஆனால் இதனை முறியடிக்க பால்ராஜ் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே தே.மு.தி.க.வேட்பாளர் சூராவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் எனில் வெற்றி யாருக்கு? வெற்றியை உறுதியாக்குவது வாக்காளர்கள்களின் கையில்தானே உள்ளது?

No comments:

Post a Comment