இந்திய, கொரிய கடலோரக் காவல்படையினர் கூட்டுப்பயிற்சி
சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது.
திருவொற்றியூர், ஜூன்.10:இந்திய, கொரிய கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னை அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கலாச்சாரத்தை தெரிந்து கொள்வதற்காகவும், இந்திய வீரர்களுடன்
இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் தென் கொரிய நாட்டின் கடலோரக் காவல்படை கப்பல் (3009) கடந்த புதன்கிழமை சென்னை வந்தடைந்தது. இக்கப்பலில் சுமார் 73 அதிகாரிகள், வீரர்கள் வந்திருந்தனர். இக்கப்பலை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று வரவேற்றனர்.
வியாழக்கிழமை இரு நாட்டு வீரர்களும் பங்கேற்ற கைப்பந்துப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில் இரு நாட்டு வீரர்கள் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி, ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடுக்கடலில் நடைபெற்றது. இதில் இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல்களான சாகர், சமுத்ரா பகீரதர், ராஜ்தரங், அனாக், டோர்னியர் ரோந்து விமானம், சேடக் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை பங்கேற்றன.
அப்போது கடல் கொள்ளையர்களிடமிருந்து வணிகக் கப்பலை மீட்டெடுத்தல், கடலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்றுதல், தீ அணைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் கூட்டுப் பயிற்சியின்போது செய்து காட்டப்பட்டன. பின்னர் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை தலைவர் ராஜேந்திரசிங், கொரிய கடலோரக் காவல்படை ஆணையர் ஹாங், கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment