Wednesday, 15 April 2015

வரிக்கு முந்தைய லாபமாக ரூ.421 கோடி ஈட்டிய காமராஜர் துறைமுகம் 

துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தகவல்

திருவொற்றியூர், ஏப்.11:காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.421 கோடி ஈட்டியுள்ளது என துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார். 
  காமராாஜர் துறைமுகத்தின் 2014-15 நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் கூறியது,
     நிறுவனச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனமான காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் 30.25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் கையாண்ட சுமார் 19 மில்லியன் டன் நிலக்கரியும் அடங்கும். நிஸ்ஸான், டொயோடா, போர்டு, ஹோண்டா, அசோக் லேலண்டு உள்ளிட்ட நிறுவனங்களின் 2.15 லட்சம் வாகனங்கள் இத்துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டுள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ. 563 கோடி வருவாய் ஈட்டியதில் செலவினங்கள் போக மீதம் ரூ.421 கோடி வரிக்கு முந்தைய லாபமாக கணக்கிடப்பட்டுள்ளது. 
ரூ.1,270 கோடியில் சரக்குப் பெட்டக முனையம்:
    அதானி குழுமம் சார்பில் ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் பணி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கான பணிகளை ஜூன், 2016-க்குள் முடிக்கும்வகையில் விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முனையம் மூலம் ஆண்டுக்கு 14 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாள முடியும். 
     தனியார் மூலம் ரூ.151 கோடி மதிப்பீட்டில் பல்துறை சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய தளம் அமைப்பதற்கான பணி உத்தரவு செட்டிநாடு நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 
விரைவில் தொடங்கும். 
      தமிழ்நாடு மின்சாரம் வாரியத்திற்கு தேவையான நிலக்கரியைக் கையாள்வதில் 
காமராஜர் துறைமுகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்கென ஏற்கனவே இரண்டு முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையம் மேலும் இரண்டு முனையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.  நான்கு முனையங்களின் மூலம் ஆண்டுக்கு 27 மில்லியன் டன் நிலக்கரியைக் கையாள முடியும். 
ரயில்பாதை இணைப்பு:
   சென்னை-விஜயவாடா மார்க்கத்தில் அத்திப்பட்டு, மணலி புதுநகரையும்,  துறைமுகத்தையும் இணைக்கும் திட்டம் ரூ.80 கோடி செலவில் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதில் சிக்னல் உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்த ரூ.11 கோடி தென்னக ரயில்வேயிடம் துறைமுக நிர்வாகம் அளித்துள்ளது. 
எதிர்காலத் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்பாதை கட்டமைப்பை ஏற்படுத்த ரூ. 60 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
கட்டமைப்பு வசதிகள்:
   துறைமுக இணைப்புச் சாலை திட்டத்திற்கு ரூ.34 கோடி காமராஜர் துறைமுகம் அளித்துள்ளது. மேலும் துறைமுக வளாகத்தில் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுதலாக 5 ஆயிரம் கார்களை நிறுத்தி வைக்கும் வகையில் முற்றம் (Yard) ரூ.15 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 
மத்திய உப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை துறைமுக உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்று வருகிறது என்றார் பாஸ்கராச்சார்.
   இதில் காமராஜர் துறைமுக இயக்குனர் சஞ்சய், பொது மேலாளர்கள் செந்தில்குமார், குணசேகரன், ஏ.கே.குப்தா, மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment