Wednesday, 15 April 2015


செம்மரக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அண்டை நாடுகள் 

மீறப்படும் அருகி வரும் தாவர விலங்கின பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

இண்டர்போல் விசாரணை தேவை?

திருவொற்றியூர், ஏப்.9: அழிந்து வரும் அரிய வகை தாவர இனங்களில் ஒன்றான செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சர்வ தேச தடை உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்படுவதை சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மார் உள்ளிட்ட அண்டை நாடுகள் மறைமுக ஆதரவளித்து வருகிறது என்ற சந்தேகம் வலுத்து வருவதாக சுற்றுச் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
செம்மரம் கடத்தப்படுவதன் பின்னணி என்ன?
    செம்மரக் கட்டைகளைக் கொண்டு விலை உயர்ந்த பாரம்பரிய இசைக் கருவிகள், மருந்து பொருள்கள், வண்ணக் கலவைகள், வாசனை திரவியங்கள், அழகு சாதன கலைப் பொருள்கள், பொம்மைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகவும், அணு உலைகளில் கதிர்வீச்சினை தடுப்பதற்கு செம்மரக்கட்டகைகள் பயன்படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் டன் செம்மரக் கட்டைகள் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில்  இதுவரை எதற்காக செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது?  ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் தெளிவான பதில் இல்லை.  செம்மரக்கட்டைகளைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைதான் இந்த மவுனத்திற்கு காரணமாக உள்ளது.
அழிந்து வரும் தாவர இனப் பட்டியலில் செம்மரம்:
       பூமியில் உள்ள கோடிக் கணக்கான தாவர,  விலங்கினங்களில் சுமார் 35 ஆயிரம் இனங்கள் மனிதப் பயன்பாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து அழிந்து வருவதாக அறியப்பட்டது. இதே நிலை தொடருமானால் அடுத்த தலைமுறையில் இவ்வினங்கள் முழுமையாக அழிந்து விடும் அபாயம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு அரியவகை உயிரினங்களைக் காப்பதற்கான சர்வதேச வர்த்தக ஒப்பந்தம்  (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora ) மார்ச் 3, 1973-ல் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் தற்போது சுமார் 180 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா-1976, ஜப்பான்-1980, சீனா-1981 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு 
ஒப்புதல் அளித்துள்ளன. 
      இதில் ஒரு தாவர இனம்தான் Pterocarpus santalinus என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட செம்மரம்.  உலகிலேயே  தரமான செம்மரம் தென்னிந்திய மலைசார்ந்த பகுதிகளில் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே செம்மரத்தை  எந்த வகையிலும் வர்த்தகம் செய்ய மேற்கூறப்பட்ட CITES ஒப்பந்தம் தடை செய்கிறது.  உள்நாட்டில் எவ்வித பயன்பாடும் அறியப்படாததால் இந்தியாவில் செம்மரத்திற்கு பொதுவாக தேவை ஏதும் இல்லை. ஆனால் சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இதன் தேவை அதிகமாக இருக்கிறது.  சர்வ தேச ஒப்பந்தத் தடை உள்ளதால் இம்மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், பயன்பாடுகள் குறித்து வெளிப்படையான விளக்கங்கள் ஏதும் எந்த நாடும் தெரிவிப்பதில்லை. 
அப்பாவிகள் மூலம் நூதனக் கடத்தல்:
     எந்தப் பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றாலும் முதலில் இறக்குமதி இறக்குமதி குறியீட்டு எண் (IEC-Import Export Code) வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் பெற வேண்டும். வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் எளிதாக இந்த குறியீட்டு எண்ணை வாங்கி விட முடியும். இதற்கான செலவும் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே. பின்னர் இவ்வெண் சுங்கத்துறையோடு இணையத் தளத்துடன் இணைக்கப்படும். பிறகு ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்கலாம். இங்குதான் கடத்தல்காரர்கள் தங்களது வேலையை ஆரம்பிக்கின்றனர். 
   ஏதேனும் ஊர் பெயர் தெரியாதவரின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து குறியீட்டு எண் பெற்றுவிடுகின்றனர்.  பின்னர் கண்டெய்னர்களில் மறைத்து வைக்க வசதியாக இருக்கும் அரிசி மூட்டைகள், கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப் போவதாக சுங்கத்துறையில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பார்கள். பிறகு அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு அரிசி மூட்டைகளோ, கிரானைட் கல்லோ கண்டெய்னர்களில் ஏற்றி சீல் வைக்கப்படும். பின்னர் வழியில் கண்டெய்னர்களை லாவகமாக கையாண்டு சீலை உடைக்காமல் அரிசி மூட்டைகளை எடுத்துவிட்டு கூடுமானவரை  செம்மரக் கட்டைகளை ஏற்றி விடுவார்கள். ஆவணங்களின்படி வெளிநாட்டிற்குச் செல்லும்வரை 
கண்டெய்னர்களில் உள்ளது அரிசியாகவே இருக்கும். இதில் அரிசிக்கான பணம் மட்டும் வங்கி மூலம் பரி்மாற்றம் செய்யப்படும். செம்மரத்திற்கான பணம் ஹவாலாதான்.. 
கடத்தலில் சிக்குவது அப்பாவிகள்தான் :
    இக்கடத்தலைக் தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (Directorate of Revenue Intelligence), சுங்கத்துறையின் சிறப்பு பிரிவுகள் பல்வேறு வகையில் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடிக்கும் வகையில் கடத்தல்காரர்கள் புதிய உத்திகளை கையாண்டு வருவதால் செம்மரக்கடத்தலை முழுவதுமாக தடுக்க முடிவதில்லை.  மேலும் பிடிபடும் செம்மரங்கள் குறித்த தொடராய்வில் ஏற்றுமதியாளரின் முகவரி தேடிச் சென்றால் ஒரு கூரை வீட்டில் ஒரு அப்பாவி அந்த பெயரில் இருப்பார். அவருக்கும் ஏற்றுமதிக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. மரம் வெட்டப்படுவது முதல் ஏற்றுமதியாளர்வரை தனித்தனியாக அப்பாவிகள் கையாளப்படுகின்றனர் என்பதே இக்கடத்தலின் சிறப்பு. ஆந்திர சிறையில் சுமார் 1,200 அப்பாவிகள் இவ்வாறுதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிறையில் உள்ளோர்களிடம் விசாரித்தால் இந்த உண்மை 
தெளிவாகத் தெரியும். சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட மரங்களை வைத்திருந்ததால், வெட்டியதால் அவர்கள் குற்றவாளிகள். அவ்வளவுதான் மற்றபடி முழுமையாக பயன் அடைந்தவர்களா? இல்லை. 
மறைமுக ஆதரவளிக்கும் நாடுகள்:
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது,
    என்னதான் பல துறைகள் கண்காணித்தாலும் செம்மரக் கடத்தலை முற்றிலும் ஒழிக்க முடியாத நிலைக்கு காரணம் என்ன? கடத்தலை ஒழிக்க வேண்டும் எனில் ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர் என இரு தரப்பையும் கண்காணித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏற்றுமதியின்போது பிடிபடும் செம்மரக் கட்டைகள் 10 சதவீதம் கூட இருக்காது என்றால் மீதம் உள்ள 90 சதவீதம் வெளிநாடுகளுக்கு எவ்வித பிரச்னையும் இன்றி இறக்குமதியாகிறதே எப்படி?. குறிப்பாக சீனா, ஜப்பான் நாடுகளுக்கு செல்லும் சரக்குகள் பெரும்பாலானவை மலேசியா சென்று அங்கிருந்து வேறு கண்டெய்னர்களில் மாற்றப்பட்டு மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுவரை சீனாவிலோ, ஜப்பானிலோ, இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செம்மரங்கள் பிடிபட்டதாக ஒரு செய்தி கூட இல்லையே?. எனில் எந்த பொருளை வேண்டுமானாலும் இந்த நாடுகளுக்கு கடத்திச் செல்ல முடியுமா? 
   எனவே சட்டவிரோதக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவை இந்நாடுகள் தொடர்ந்து அளித்து வருகின்றன. அரசாங்க ஆதரவின்றி நிச்சயம் செம்மரக் கட்டைகள் இந்நாடுகளுக்குள் ஊடுறுவ முடியாது. செம்மரக் கட்டைகள் குறித்து வெளியில் தெரியும் பயன்பாடுகள் தவிர ஏதோ முக்கிய காரணத்திற்காக இம்மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அது அணு உலையா? கதிர்வீச்சா? நமக்கு ஏதும் தெரியாது. 
ஆனால் CITES ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன என்பதை மறைக்க முடியாது. அதே போல் தெரிந்தே இந்த ஒப்பந்தத்தை மீறுகின்றனவா? என்பது குறித்து  அனைத்து நாட்டுக் குற்ற ஒழிப்புக் காவல் துறைக்குழு (INTERPOL) மூலம் விசாரணை நடத்திட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றனர்.
    ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 அப்பாவித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி குறித்து சமூக ஆர்வலர்களின் கருத்து வலுப்பெற்றாக வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது என்றால் அது மிகையல்ல. 


பெட்டிச் செய்தி  

'ஆபரேசன் சேஷா'

செம்மரக் கடத்தலைக் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் இதன் இயக்குனர் நஜீப் ஷா கடந்த 23.1.2015 அன்று சுங்கத்துறை ஆணையர்களுக்கு க்கு ரகசிய சுற்றறிக்கை (கடித எண்:DRI F.NO.DRI/HQ-Pol/21/31/2014) அனுப்பியுள்ளார். இதில்  கடந்த பிப்ரவரி 1 முதல் ஏப்.30 தேதிவரை 3 மாதங்களுக்கு செம்மரக் கடத்தலைத் தடுக்க 'ஆபரேசன் சேஷா'(Operation Sesha) எனப் பெயரிடப்பட்டு மத்திய வருவாய் புலனாய்வுத் துறையுடன் சுங்கத்துறை இணைந்து செயல்படுத்த வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்த ஆபரேசன் மூலம் மிகவும் மதிப்பு வாய்ந்த அருகி வரும் இனத்தைச் சேர்ந்த   செம்மரங்கள் கடத்தப்படும்போது கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாக குறிக்கோளாக இல்லாமல், கடத்தலில் நேரடியாக, மறைமுகமாக கூட்டாகச் செயல்படுபவர்கள், பண பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தெல்லாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும். கடத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தால் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல்கள் விரைவாக தெரிவிக்கப்படும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment