Friday, 7 April 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:

தேர்தலைக் கண்காணிக்க 70 மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படை  

டி.கார்த்திகேயன் தகவல்  

திருவொற்றியூர்,ஏப்.6: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலர்கள் அடங்கிய 70 பறக்கும் படை அணிகள் வியாழக்கிழமை முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என மாவட்டத் தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான டி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, 
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. சுமார் 800 மத்திய படையினர் ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய 30 பறக்கும் படை குழுக்கள் வாகனச் சோதனை, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நுண் பார்வையாளர்கள்:
   இந்நிலையில் இத்தொகுதியில் உள்ள 7 வார்டுகளில் தலா 10 பேர் கொண்ட நுண் பார்வையாளர்களுடன் கூடிய பறக்கும் படைகள்  (Micro Observer Flying Squad) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 70 மத்திய அரசு அதிகாரிகள் நுண்பார்வையாளர்களாகச் செயல்படுவார்கள். இவர்களை இப்பகுதியை நன்கு அறிந்த போலீஸார் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வார்கள்.  24 மணி நேரமும் மூன்று குழுக்களாகப் பிரிந்து வேவு பார்க்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். எங்காவது முறைகேடுகள், பணப் பட்டுவாடா உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் உடனடியாக 
தேர்தல் அதிகாரிக்கோ, பறக்கும் படையினருக்கோ தகவல் அளிக்கலாம். இக்குழுவினர் ஏப்.11-வரை பணியில் ஈடுபடுவார்கள். 
பணப்பட்டுவாடாவைத் தடுப்பது சவாலாக உள்ளது:
    தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் தப்பிவிடுகின்றனர். நேற்றுவரை ரூ.14 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன சோதனையின்போது சிக்கிய ரூ.7 லட்சம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருடையது எனவும், வியாபாரம் நிமித்தமாக பணத்தை எடுத்து வந்ததாக
ஊர்ஜிதமானதையடுத்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பணப் புழக்கத்தை தடுக்க
வருமானவரித்துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் கார்த்திகேயன்.


புதுடில்லியின் நேரடிப் பார்வையில் ஆர்.கே.நகரின் கண்காணிப்புக் கேமரா   

  பார்வையாளர்கள் அனைவருமே மத்திய அரசு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. 
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் நாடுமுழுவதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் பணப்பட்டுவாடா, முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என 50 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளன. இந்நிலையில் எந்தவகையிலும் வாக்களிக்கப் பணம் கொடுப்பதைத் தடுப்பது என தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளை நம்பாமல் அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு ஊழியர்களை பார்வையாளர்களாக நியமித்துள்ளது ஆணையம். 
     இவர்கள் அனைவருமே நேரடியாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகிறார்கள். இது தவிர மத்திய அரசின் பல்வேறு உளவுப் பிரிவுகள் ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் தகவல்களைத் திரட்டி டெல்லிக்கு அனுப்பி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறுகையில், எனது 20 ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் இது போன்றதொரு கடுமையான தேர்தல் ஏற்பாடுகளை நான் பார்த்தது இல்லை.  முன்பெல்லாம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் என்பது சில இடங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 256 வாக்குச் சாவடிகளும் இவ்வாறு கண்காணிக்கப்படுவது  இதுவே முதல்முறை எனக்குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் ஆர்.கே.நகரை கண்காணிக்கும் கேமரா புதுடில்லியிலிருந்து கண்காணிக்கப்படுகிறது என்பதே உண்மை நிலவரம். 

No comments:

Post a Comment