Monday, 17 April 2017

'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

இன்று முதல்வர் பழனிசாமி வருகை 

திருவொற்றியூர், ஏப்.16:முதல் முறையாக சென்னை வந்த 'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை இரு தினங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
   இந்திய கடற்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். சென்னை' என்ற போர்க்கப்பல் தனது முதல் பயணமாக சனிக்கிழமை சென்னை வந்தது. அப்போது சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வரிசையில் நின்று கொடியசைத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்கள்  கப்பலில் ஏறி சுற்றிப் பார்த்தனர். இதனையடுத்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகே கடலில் ஒளி அலங்காரம் செய்யப்பட்டு இக்கப்பல் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 
ஞாயிற்றுக்கிழமை கப்பலை பொதுமக்கள் பார்வையிட கடற்படை அனுமதித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கப்பலை பார்வையிட்டதாகவும், இரு தினங்களில் கப்பலைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை மொத்தம் சுமார் 5 ஆயிரம் என பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில்  கப்பலைப் பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வருகைதர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சிகரமான அனுபவம்: பொதுமக்கள் நெகிழ்ச்சி
கப்பலைச் சுற்றிப்பார்த்தது குறித்து பெருங்களத்தூரைச் சேர்ந்த என்.சங்கர் (35) கூறியது,
   நானும் எனது நண்பர்களும் கப்பலைப் பார்வையிட்டோம். கடற்படை அதிகாரிகள் பேருந்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் கப்பலில் ஏறி முக்கிய பகுதிகளில் பார்வையிட அனுமதித்தனர். சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டோம். எங்களுக்கு கப்பலைப் பார்வையிடுவது இதுதான் முதல்முறையாகும். எனவே மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே இருந்தாலும் பார்வையிடுவது மட்டுமே போதுமானது அல்ல. ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி வைத்து போர்க்கப்பலின் சிறப்பு, கடற்படையினரின் பணிகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் பொதுமக்கள் எங்கே வரவேண்டும், அனுமதியை யார் தருவது என்பதை முன்னதாகவே முறையாக அறிவித்திருந்தால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருந்திருக்காது. மேலும் இது போன்ற கப்பல்கள் வருகை தரும்போது கூடுதல் நாள்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றார் சங்கர்.


தவறான தகவல்கள்தான் சிரமங்களுக்கு காரணம்

ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம் கூறியது, 
   போர்க்கப்பலை வரவேற்க மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்  ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என கடற்படை ஏதும் அறிவிக்கவில்லை. பொதுமக்கள் பார்வையிடத்தான் மெரினா கடற்கரையை ஒட்டி கப்பலை நிறுத்தியது . ஆனால் தவறான தகவல்களின் பேரில் பொதுமக்கள் 18-ம் தேதிவரை கப்பலை நேரில் பார்வையிடலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கானோர் நேப்பியால் பாலம் அருகே கடற்படை அலுவலகம் அருகில் குவிந்துவிட்டனர். இதன்பிறகு வேறு
வழியின்றி பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு கப்பலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். முடிந்த அளவு பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் 
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.  எனவே பொதுமக்களுக்கு இனி அனுமதி இல்லை என்றார் சண்முகம். 

No comments:

Post a Comment