Wednesday, 24 July 2013

தினமணி செய்தி எதிரொலி..... செயல்படத் தொடங்கியது திருவொற்றியூர் எரிவாயு தகன மையம்

-ஒரே நாளில் 3 சடலங்கள் எரிப்பு

திருவொற்றியூர்:இரண்டு முறை திறப்பு விழா கண்டு செயல்பாட்டுக்கு வராத  திருவொற்றியூர் எரிவாயு தகன மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது.
     திருவொற்றியூரில் ரூ.1.10 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எரிவாயு தகன மையம் கடந்த 2011-ல் திறக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களில் மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர மேயர் சைதை எஸ். துரைசாமி நேரில் ஆய்வு செய்து எரிவாயு தகன மையத்தை சீரமைத்து உடனடியாகத் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தகன மையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும் புதுப்பிக்கப்பட்ட எரிவாயு தகன மையத்தை கடந்த ஜூன்.17 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேயர் சைதை துரைசாமி திறந்தும் வைத்தார். ஆனாலும் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்தபாடு இல்லை. பழைய முறையிலேயே சடலங்கள் விறகு, எரு ராட்டை உள்ளிட்டவைகளால் எரிக்கப்பட்டன.
        இம்மையம் செயல்பாட்டுக்கு வராததிற்கான காரணம் குறித்து மண்டலக்குழுத் தலைவர் தனரமேஷிடம் கேட்டபோது, 'மயான ஊழியர்களின் எதிர்ப்பால்தான் மையம் செயல்படுவதில் தடங்கல் உள்ளது' என தெரிவித்தார். இது குறித்து தினமணி ஜூலை.16 நாளிதழில் 'இரண்டு முறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை' என சிறப்புச் செய்தி வெளியானது. 

மேயர் துரித நடவடிக்கை:
    இது குறித்து தகவல் அறிந்த மேயர் சைதை துரைசாமி வெளிநாட்டில் இருந்த போதும் தகன மையத்தை உடனடியாகத் செயல்பட வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மண்டல அலுவலர் காங்கேயன் கென்னடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மயான ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய எரிவாயு தகன மையம் செயல்பட மயான ஊழியர்கள் ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணி நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஓரே நாளில் மூன்று சடலங்கள் எரிப்பு:
   இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் தகன மையம் செயல்படத் தொடங்கியது. காலடிப்பேட்டை மேற்கு மாடவீதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் எம்.இ. குமாரின் உறவினர் பார்வதி புற்றுநோய் பாதிப்பினால் சனிக்கிழமை இறந்து போனார். 
பார்வதியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு தகன மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. இரவு வரை மேலும் இரண்டு சடலங்கள் எரிக்கப்பட்டன. 

மயான ஊழியர்கள் வேண்டுகோள்:

இது குறித்து மயான ஊழியர்கள் சார்பில் ஆனந்தன் கூறியது,
    திருவொற்றியூர் மயானத்தில் பரம்பரையாக சடலங்களை எரிக்கும், புதைக்கும் பணியைச் செய்து வருகிறோம். இந்நிலையில் புதிய எரிவாயு தகன மையத்தை திறந்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் மையம் செயல்பட முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எங்களின் ஏழ்மை நிலை கருதி கருணை அடிப்படையில் 9 மயான ஊழியர்களையும் மாநகராட்சி ஊழயர்களாக நியமிக்க வேண்டும். இதனைத்தான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறோம்.  மற்றபடி தகன மையத்தை செயல்படவிடாமல் இதுவரை தடுத்தோம் என்பது தவறான தகவல் என்றார் ஆனந்தன்.
தடங்கலின்றி செயல்படக் கோரிக்கை:
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுநல ஆர்வலர் அரிமா என்.துரைராஜ் கூறியது,
    திருவொற்றியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் இது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்மையம் செயல்படுதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது. இனிமேலாவது இம்மையம் தடங்கலின்றிச் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தகன மையத்தில் உள்ள அமரர் பூங்கா, நீரருவி உள்ளிட்டவைகளை பராமரிக்க தேவையான தண்ணீரை வழங்க வேண்டும்.  ஏற்கனவே சென்னை மாநகராட்டியில் உள்ள விதிமுறைகள், திட்டங்கள் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் இன்னும் விரிவுபடுத்தாமல் இருப்பதே இது போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் கூறப்படுகிறது. எனவே இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர், மாநகர மேயர் ஆகியோர்  துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் துரைராஜ். 

1 comment:

  1. அப்பாடா !!! இப்பயாவது செயல்படுத்தினங்களே!!!!
    தினமணி வெளிபடுத்தியதற்கு நன்றி......

    ReplyDelete