Thursday, 24 September 2015

திருவொற்றியூரில் ரூ. 1.57 கோடியில் அதிநவீன டிஜிட்டல் பொது நூலகம் 

அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

திருவொற்றியூர், செப்.21:திருவொற்றியூரில் ரூ.1.57 கோடி செலவில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் வசதியுடன் கூடிய அதிநவீன பொது நூலகத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
       திருவொற்றியூர் சண்முகனார் பூங்காவையொட்டி 1958 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறிய பொது நூலகம் ஒன்று இயங்கி வந்தது.  இதனை அதிநவீன டிஜிட்டல் நூலகமாக தரம் உயர்த்துமாறு இப்பகுதி நூலக வாசகர்கள் தொடர்ந்து வலியறுத்தி வந்தனர். இதனையடுத்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதி-ரூ.82 லட்சம், திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழு நிதி-ரூ 10 லட்சம், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு நிதி-ரூ.65 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு இந்நூலகம் ரூ.1.57 கோடி செலவில் மூன்று அடுக்குகள் கொண்ட அதிநவீன டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதிலுள்ள மூன்ற தளங்களில் நாளிதழ், பெண்கள், சிறுவர்கள், கணினி நூலகம், போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், கண்பார்வை இழந்தவர்களுக்கான சிறப்பு வசதிகள், நூல்கள் வழங்கும் பிரிவு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் இந்நூலகத்தில் அமைந்துள்ளது.
    இந்நூலகத்தின் கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவ் தலைமையும், சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் முன்னிலையும் வகித்தனர். இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நூலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா குத்துவிளக்கு ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹிம், வடசென்னை மக்களவை உறுப்பினர் வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொது நூலகங்கள் அமைப்பதில் தமிழகம் முதலிடம்:
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது, 
      தொலை நோக்குத் திட்டம் 2023-ஐ அறிவித்து அதன்படி தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்லும் உன்னத பணியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயலாற்றி வருகிறார். மேலும் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.  கற்றல் என்பது வெறும் கல்வி பெறுவது மட்டும் அல்ல. வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டும். புத்தகங்கள் வாங்கும் செலவினம் என்பது அறிவு வளர்ப்பதற்கான மூலதனம் ஆகும்.     பொது நூலகங்களை அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 1948-ம் ஆண்டிலேயே பொது நூலகச் சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழகம்தான்.  ஆயிரம் பேர் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் கூட நூலகங்கள் தமிழகத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன.  நூலகவியலின் முன்னோடியான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் நல் நூலகர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  சிறந்த நூலகங்களுக்கு வெள்ளிப் பதக்கம், பண முடிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
      திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாளநகர், கடம்பத்தூர், தணிக்காசலபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. பண்பாடு நிறைந்த, அறிவுசார்ந்த சமுதாயம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனில்  பொது நூலக இயக்கம் ஒரு சமுதாய இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் வீரமணி.
அனைவரும் படிக்க வேண்டும்: அமைச்சர் ரமணா
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது,
    திருவொற்றியூர் நகர வரலாற்றில் இந்நூலகம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.  இந்நூலகத்திற்கு மாணவர்கள் மட்டுமல்லாது வீட்டில் உள்ள பெண்கள், வேலைக்குச் செல்வோர், வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள், வேலை செய்பவர்கள், சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பு மக்களும் வரவேண்டும். பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்துவிட்டு நூலகத்திற்கு வருவதற்கு பழக வேண்டும். அப்போதுதான் அரசியல் உள்ளிட்ட அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியும். அறிவார்ந்த சமுதாயத்தை அமைப்பதில் புத்தகங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அமைச்சர் ரமணா. 
வாசிப்பு என்பது தலைசிறந்த பண்பாடு:
நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி பேசியது,
     நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் மனநிறைவைத் தந்த நிகழ்ச்சி இது. 
வாசிப்பு என்பது தலைசிறந்த பண்பாடு ஆகும். ஒருவர் எந்த துறையில் வல்லுனராக இருந்தாலும் அனைத்து துறைகள் குறித்தும் பொது அறிவு தேவை. முன்பு தொடக்கப்பள்ளியில் படிக்கும்போதே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர்.  ஆனால் தற்போது புத்தகங்கள், செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடையே தொடர்ந்து குறைந்து வருகிறது.  இதனை மாற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார் துரைசாமி.
கூடுதல் பணியாளர்கள் தேவை:
நிகழ்ச்சியில் கே.குப்பன் எம்.எல்.ஏ.பேசியது,
    தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் திறக்கப்பட்டுள்ள இந்நூலகத்திற்குத் தேவையான பணியாளர்கள் உடனடியாக நியமிக்கவேண்டும். மேலும்  முழுதும் குளிரூட்டப்பட்ட வசதி,  வண்ண நகல் எடுக்கும் கருவி, மின் தடையைச் சமாளிக்க  ஜெனரேட்டர் வசதி,  குடிமைப் பணிக்கான சிறப்பு பயிற்சி மையம், அனைத்து கணிணிகளையும் ஒருங்கிணைக்கும் தடையில்லா மின் வழங்கல் கருவி உள்ளிட்டவைகள் அமைக்க பொது நூலகத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை என்றார் குப்பன். 
     நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குனர் எஸ்.கண்ணப்பன், மாவட்ட நூலக அலுவலர்  தனலட்சுமி, நூலக வாசகர் வட்ட கௌரவத் தலைவர் அரிமா துரைராஜ், நூலகப் புரவலர் தொழிலதிபர் ஜி.வரதராஜன், சமூக சேவகர் கே.சுப்பிரமணி, கிளை நூலகர் பாணிக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

1 comment: