Thursday, 24 September 2015


மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் 
அரசுகளுக்கிடையே அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது 

அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்


திருவொற்றியூர், ஆக.26:மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசுகளுக்கிடையே அரசியல் வேறுபாடு இருக்கக் கூடாது என கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் புதன்கிழமை தெரிவித்தார்.
   சென்னைத் துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ.63 கோடி மதிப்பீட்டிலான கடலோரச் சாலை, ரூ.17 கோடியிலான பயணிகள் முனையத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட நடமாடும் பலுதூக்கிகளை இயக்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது,
   சென்னைத் துறைமுகத்தில் சுமார் ரூ.151 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ரூ.173 கோடி நட்டத்தில் இயங்கிய இத்துறைமுகம் கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.23 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தியும், புதிய சரக்குகள் மூலமும், காமராஜ் துறைமுகத்தின் மீதான முதலீட்டு லாபம் உள்ளிட்டவைகள் இது சாத்தியமானது. 
   உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் சரக்குகளை எடுத்துச் செல்வதில் நீர்வழிப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சீனாவின் சரக்குப் போக்குவரத்து சுமார் 47 சதவீதம் நீர் வழிப்பாதைகள் மூலம்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் நீர்வழிப்போக்குவரத்து மூலம் நடைபெறும் சரக்குப் பரிமாற்றம் சுமார் 6 சதவீதம் மட்டுமே. சாலை போக்குவரத்தை விட பல மடங்கு செலவு குறைந்த, எளிதான நீர்வழிப் போக்குவரத்து கப்பல்த் துறை அமைச்சகம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு:
    சென்னைத்துறைமுகத்தில் நிலவும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாகத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது. ரூ 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவு வாயில்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சரக்கு ரயில்கள் மூலம் பெட்டங்களைக் கையாளும் முறை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 சதவீத நெரிசல் குறையும். துறைமுகத்தின் திறனுக்கும் நெரிசலுக்கும் தொடர்பில்லை. 

மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம்: 
      துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தில் சுமார் 900 மீட்டர் பகுதியைத் தவிர அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதிலுள்ள சில தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் இத்திட்டம் முழுமையாக நிறைவு பெறும்.
மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர் கட்காரியும், நானும் பல முறை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தால் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யவும், தேவையெனில் சில இடங்களில் வழியை மாற்றவும், இன்னும் தேவையெனில் புதிய வழித் தடத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றவும் மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எங்களைப் பொருத்தவரை இதில் ஏதும் அரசியல் மாறுபாடு கிடையாது. மற்றவர்களுக்கு அவ்வாறு இருக்குமா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் இது போன்ற மக்கள் நலத் திட்டங்களில் அரசுகளுக்கிடையே அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது என்பது முக்கியமானது.  இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கும் என நம்புகிறோம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை எனில் சென்னைத் துறைமுகம் எதிர்காலத்தில் கண்காட்சியகமாக மாறும் அவல நிலை உள்ளது.  
குளச்சல் துறைமுகம்:
   சாகர்மாலா திட்டத்தின் முக்கிய நோக்கம் துறைமுகங்களுக்கிடையே இணைப்பு ஏற்படுத்துவது, சிறிய, பெரிய துறைமுகங்களை ஏற்படுத்துவது, உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகளை அதிகரிப்பது உள்ளிட்டவை அடங்கும். நாட்டின் தென்கோடியில் உள்ள குளச்சல் துறைமுகம் பெரிய துறைமுகமாக மேம்படுத்த அமைச்சகம் தயாராக உள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய துறைமுகத்தை அமைக்க அனைத்து சாதகமான அம்சங்களும் உள்ளன. இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதி குளச்சலில் உள்ளது. மேலும் சர்வதேச கடல் வழித் தடம் குளச்சலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர் ராதாகிருஷ்ணன்.
   நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார், துறைமுக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சோழநாச்சியார் ராஜசேகரன், கருப்பு முருகானந்தம், பி.எஸ்.கிருஷ்ணன், காமராஜர் துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார், கான்கார் முதன்மை பொதுமேலாளர்கள் பாலாஜி அருண்குமார், ஸ்ரீகுமார், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் சிவகுமார், கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment