'கண்டெய்னர் லாரிகளால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு'
பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூர்,ஆக.22:சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளால் வடசென்னை பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூரில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் மாதவரம், மணலி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு வழியாகவே செல்கின்றன. ஆயிரக் கணக்கான லாரிகள் இவ்வழியே தினசரி செல்லும் நிலையில் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருவதாகக் கூறி சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலையில் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் வெள்ளிக்கிழமை
இப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியது,
முன்பு இருவழிச்சாலையாக இருந்தபோது கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறுகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இச்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலை, ஆறுவழிசாலையாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் நெரிசல் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதற்கு முதல் காரணம் சென்னைத் துறைமுகம்தான். துறைமுகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த இரண்டு தனியார் சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. ஏற்றுமதிக்காகச் செல்லும் கண்டெய்னர்களை
இறக்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பல மணி நேரத்திற்கு கண்டெய்னர்களை இறக்கி வைக்கும் பணிகள் நிறுத்திவிட்டு வேறு பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால் லாரிகள் செல்வதில் தேக்கநிலை ஏற்பட்டு படிப்படியாக மாதவரம், மீஞ்சூர்வரை லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன.
இரண்டாவது காரணம் போக்குவரத்து காவல்த் துறையில் உள்ள சில அதிகாரிகள்தான். லாரிகள் ஒரே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பின் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது. ஆனால் நெரிசலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் போலீசார் லாரிகளை சுமார் 10 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து ஆங்காங்கு நிறுத்தி வைக்கின்றனர். பின்னர் இச்சாலையில் இடம் காலியாக இருக்கும்போது வரிசையை முந்திச் செல்லும் வகையில் பின்னால் வரும் லாரிகளை போலீஸாரே முன்னால் அனுப்புகின்றனர். இவ்வாறு போட்டிபோட்டுக் கொண்டு
ஏறி வரும் லாரிகளால்தான் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான இடங்களில் மூன்று வரிசைகளில் லாரிகள் நிறுத்தப்படுகின்றனர். இதனால் வீட்டைவிட்டு வெளியே செல்வதோ வீட்டிற்கு திரும்பி வருவதோ மிகுந்த சிரமமாக உள்ளது. பெண்கள், பள்ளி மாணவர்கள் ஆபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் இப்பகுதியிலிருந்து மீஞ்சூர், மாதவரம், செங்குன்றம் செல்ல வேண்டும் எனில்
எந்நேரமும் லாரிகளுக்கிடையே சிக்கிக் கொண்டு மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது. பேருந்துகள், பொதுமக்கள் வாகனங்கள் இப்பகுதியில் செல்வதே குதிரைக் கொம்பாக உள்ளது.
எனவே இப்பிரச்னையைத் தீர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகள் வரிசையில் நிற்காத அளவிற்கு கண்டெய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்கவும், முடியவில்லையெனில் வரிசையில் நிற்கும் லாரிகளை துறைமுகத்தில்
உள்ள காலி இடங்களில் நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் மீறி லாரிகள் நீண்ட வரிசையில் நிற்க நேரிட்டால் போக்குவரத்து போலீஸார் லலாரிகளை சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்காமல் ஒரே வரிசையில் மட்டும் செல்லும்படி ஒழுங்குபடுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் உதவி ஆணையர் தென்னரசு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கண்டெய்னர் லாரிகள் நெரிசலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படும். தவறிழைக்கும் போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுக நிர்வாகத்தின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்படும் என காவல்த் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து இரண்டு மணி நேர சாலை மறியல் போராட்டத்தைப் பொதுமக்கள்
கைவிட்டனர். போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை மறியலால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
No comments:
Post a Comment