Friday, 8 May 2015

மாநகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?

போலீஸார் துருவி துருவி விசாரணை 

திருவொற்றியூர், மே 6:சென்னை மாநகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் ஆர்.வி. தன்ராஜ் மற்றும் திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ரவி ஆகியோர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்புடையவர்கள் யார் என்பது இதுவரை துப்புத் துலங்கவில்லை. இதனையடுத்து இருவரிடமும் தனிப்படை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 12-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஆர்.வி.தன்ராஜ். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ரவி என்பவருடன் இணைந்து நிலம், வீட்டுமனை விற்பனை தொழில் செய்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை இரவு இருவரும் காலடிப்பேட்டையில் உள்ள ரவியில் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். மேலும் இருவரது அலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து கவுன்சிலர் தன்ராஜின் மனைவி விஜயலட்சுமி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீஸார் பல்வேறு கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் மனைவிக்கு போன் செய்த தன்ராஜ் தாங்கள் இருவரும் அரும்பாக்கத்தில் உள்ளோம்,  இன்னும் சில மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்பி விடுவோம் என தெரிவித்திருந்தார். 
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 
    இந்நிலையில் போலீஸார் நடத்திய தீவிர சோதனையில் ராயபுரத்திலிருந்து திருவொற்றியூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த தன்ராஜ் மற்றும் ரவியை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர். அப்போது இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இத்தகவல் பரவியதையடுத்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு திரண்டர். இதனையடுத்து இருவரையும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர். 
சம்பவத்தின் பின்னணி என்ன?:
    அப்போது இருவரும் தங்களை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே வந்து அறையில் இருந்த இருவரையும் குண்டுக் கட்டாக தூக்கி சென்று காரில் ஏற்றிக் 
கடத்திச் சென்றனர். பின்னர் இருவரையும் திருவண்ணாமலை அருகே அழைத்துச் சென்று அங்கு சிறை வைத்தனர். அப்போது இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டோம். பின்னர் கடத்தல் கும்பலின் தலைவன் எனக் கூறி ஒருவர் வந்தார். எங்களை விடுவிக்கும்படி கூறினார். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட நாங்கள் பேருந்தில் சென்னை வந்தடைந்தோம் என போலீஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
ஆனால் யார் கடத்தினார்கள்? என்ன காரணத்தை அவர்கள் தெரிவித்து தாக்கினார்கள்?
என்ற கேள்விக்கு இருவருமே முன்னுக்குப் பின் முரணான பதிலையே தொடர்ந்து அளித்து வந்ததால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ரவிக்குமார், கிழக்கு மண்டல இணை ஆணையர் தினகரன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். இருப்பினும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புதன்கிழமை இருவரையும் ரகசிய இடத்திற்குக் 
கொண்டு சென்று துருவி, துருவி திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தின்போது தொடர்பு கொண்ட அலைபேசி எண்களின் விபரத்தைக் கொண்டு கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நிலம் குறித்த பிரச்னையின் பின்னணியில் இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்புவதாக விசாரணை நடத்தி வரும் போலீஸார் தெரிவித்தனர். 




விலகாத மர்மம்:
   திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கவுன்சிலர் தன்ராஜ் மற்றும் ரவி கடத்தப்பட்ட இடம் இரவு 12 மணி வரை ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். மேலும் கூப்பிடும் தூரத்தில்தான் திருவொற்றியூர் காவல் நிலையம் அமைந்துள்ளது.  எனவே இவர்கள் கடத்தப்படும்போது இச்சம்பவம் யார் கண்ணிலும் படாதது எப்படி? நள்ளிரவுவரை இருவரும் பேசிக்கொண்டிருந்தன் மர்மம் என்ன? எப்போதும் உடன் இருக்கும் கார் டிரைவரை வீட்டிற்கு அனுப்பியதன் பின்னணி என்ன? என்பது குறித்தெல்லாம் மர்மமாக உள்ளது.  கடத்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால் ஒழிய இதில் மர்மம் விலக வாய்ப்பில்லை. கடத்தப்பட்டவர் மாநகராட்சி கவுன்சிலர் என்பதால் உயர் அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக திருவொற்றியூர் போலீஸார் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment